ஊட்டி, மார்ச் 8: கோடை சீசன் துவங்கும் முன் ஊட்டியில் உள்ள நகராட்சி பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் நகராட்சி பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்ட நிலையில், பெரும்பாலான பூக்காக்கள் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. அதேபோல் சில பூங்காக்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த 2009-10ம் ஆண்டில் கோத்தகிரி சாலையில் உள்ள பூங்கா, டேவிஸ், பாறை முஜீஷ்வரர் கோயில், போஸ் திடல் பூங்கா உட்பட 5 பூக்காக்களை பல லட்சம் செலவில் நகராட்சி நிர்வாகம் சீரமைத்தது. மேலும், செயற்கை நீருற்று உட்பட பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கு பின் இப்பூங்காக்களை பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. கடந்த திமுக., ஆட்சியின் போது சீரமைக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தும் தற்போது புதர் மண்டி காணப்படுகிறது. பல பூங்காக்கள் மீண்டும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதில், டேவிஸ் பூங்கா, பஸ் நிலையம் பூங்கா போன்றவைகள் மிகவும் மோசமான நிலையில், உள்ளன.