திருச்சி, மார்ச் 7: அரியமங்கலம் குப்பை கிடங்கு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 6 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். திருச்சி அரியமங்கலத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 400 டன் வரை மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அதிகரித்து விட்டதால், இயற்கை உரம் தயாரிக்கும் பணி நின்று விட்டது.
இதனால் தற்போது குப்பைகள் சேர்ந்து மலை போல் காட்சியளிக்கிறது. இந்த குப்பை குவியல்கள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. இந்த குப்பைகிடங்கில், திடீர் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்று பகல் 12 மணியளவில் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதுகுறித்து தகவலின்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் 2 வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.