புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்வெழுத விரும்புவோர் இன்று முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் இயக்குனர் மற்றும் டீன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. இத்தேர்வு ஆன்லைன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் (www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான பதிவு இன்று (6ம்தேதி) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.