புதுச்சேரி, மார்ச் 6: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்குகிறது. இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் துவங்கும் புதன்கிழமையன்று குருத்தோலை சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்று அழைக்கின்றனர். இன்று (6ம்தேதி) துவங்கும் சாம்பல் புதன் அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பு கடைபிடிக்கப்படும். மேலும் தவக்காலத்தில் தொடரும் 6 வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்கள் தோறும் சிலுவைபாடுகளை தியானிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக புதுச்சேரியில் அனைத்து கத்தோலிக்க திருச்சபை தேவாலயங்களில் நெற்றியில் குருத்தோலை சாம்பல் பூசும் நிகழ்ச்சி இன்று திருப்பலியுடன் நடக்கிறது.