ஆறுமுகநேரி, மார்ச் 1: காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் இருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்தோடு சேர்க்கக் கோரி வருகிற 8ம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் ஆறுமுகநேரி சர்வக்கட்சி, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமை வகித்தார். சமுதாய மேம்பாட்டு மகளிர் சங்கத்தலைவி செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன், ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன், பேரூராட்சி முன்னாள் தலைவி தங்கதிலகா அசோகர், ஆறுமுகநேரி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் பூபால்ராஜன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் இருக்கும் ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராமத்தோடு சேர்க்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வருகிற 8ம் தேதி ஆறுமுகநேரி மெயின் பஜார் நான்கு சாலை சந்திப்பு மற்றும் ஆறுமுகநேரி அளத்துமுக்கு தூத்துக்குடி - நெல்லை சாலை என 2 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்காவிட்டால், தேர்தலை ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதி வாக்காளர்கள் முற்றிலும் புறக்கணிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.