கூடலூர், பிப்.27: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட வனப்பகுதியான மசினகுடி, சிங்கரா மற்றும் சீகூர் வனப்பகுதிகளில் கடந்த 23ஆம் தேதி காட்டு தீ ஏற்பட்டது. இதனால், மசினகுடி வனச்சரகம் மன்றாடியார் வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் புற்கள், செடி, கொடிகள் தீயில் கருகின. இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வனப்பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் தூர சாலை ஒரத்தில் புல்வெளிகளில் எதிர் தீ வைக்கப்பட்டு காட்டு தீ வேறு பகுதிக்கு பரவாமல் கட்டுபடுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் ஆங்காங்கே சாய்ந்து கிடக்கும் மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்களில் ஏற்பட்டுள்ள நெருப்பை அணைக்கும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். வனச்சரகர்கள் மாரியப்பன், காந்தன், செல்வம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.