பழநி, பிப். 27: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி 2007 பால்குட ஊர்வலம், உற்சவ சாந்தி நடைபெற்றது. பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று வஉசி மன்ற தலைமையகம், அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், அடிவாரம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 2007 பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவசாந்தி விழா நடந்தது. காந்திமார்க்கெட்டில் இருந்து கிளம்பிய பால்குட ஊர்வலத்திற்கு சித்தனாதன்சன்ஸ் எஸ்ஜி.சிவநேசன் தலைமை வகித்தார். பெரியகடைவீதி, ரதவீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை ஊர்வலம் சென்றடைந்தது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பால்குடங்கள் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சிகால பூஜை நடத்தப்பட்டது. அம்மன் சுற்ற அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு நாககன்னி அலங்காரம்செய்யப்பட்டது. பின்னர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு மாசித்திருவிழா நிறைவாக உற்சவசாந்தி நிகழ்ச்சி நடந்தது.