காரைக்கால், பிப். 20: காரைக்காலில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தவர், மர்மநபர்களின் செல்போன் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆண், பெண் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடிவருகின்றனர். காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசாகுடி காமராஜ் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாலை வீட்டில் யாருடனோ போனில் சப்தமாக பேசிகொண்டிருந்தவர், திடீரென வீட்டு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, வட்டி பணம் வசூல் செய்வதில் குறிப்பிட்ட சிலர் சுரேஷை செல்போனில் மிரட்டியதாகவும், அதனால்தான் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டதாகவும், இதன்பேரில் விசாரணை நடத்தவேண்டும் என, அவருடைய மனைவி சுதா, கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுரேஷை செல்போனில் மிரட்டிய மர்மநபர் குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையில், காரைக்காலை சேர்ந்த ஆனந்திசந்திரன் என்ற பெண்ணுக்கு சுரேஷ் ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதை திருப்பி கேட்டதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.