திருவண்ணாமலை, பிப்.13: பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டரை, மருத்துவக் குழுவினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை அடுத்த கோவூர் கிராமத்தில் போலி டாக்டர் கிளினிக் நடத்தி வருவதாகவும், சட்ட விரோத கருக்கலைப்புக்கு உதவியாக இருப்பதாகவும் கலெக்டர் கந்தசாமிக்கு தொலைபேசி மூலம் புகார் கிடைத்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டி.பாண்டியன் தலைமையில், மருந்து ஆய்வாளர் சங்கர், மருத்துவ இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பு உதவியாளர் ரகுபதி உள்ளிட்டோர் நேற்று கோவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் நடந்து வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அங்கு சோதனை செய்து, கிளினிக் நடத்திய ஷாஜகான்(47) என்பவரிடம் விசாரணை செய்தனர். அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும், பிளஸ் 2 வரை மட்டுமே படித்திருப்பதும் தெரியவந்தது.