விருதுநகர், பிப்.7: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமிற்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை. தங்களை அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 1.25 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு என அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காது, மூக்கு, தொண்டை, நரம்பியல், ஆர்த்தோ மற்றும் சைக்காலஜி மருத்துவர்கள் என ஒரே நேரத்தில் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த மருத்துவரும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. சிலர் முகாம்களுக்கு வருவதே இல்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். நேற்று விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் முகாம் நடப்பதாகவும், இதில் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படுவதாகவும் காலை 10 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குரிய மருத்துவர்கள் வரவே இல்லை. கடைசியாக மதியம் ஒரு மணியளவில் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றார். இதனால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர்.