செஞ்சி பிப். 6: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு முத்துமணிரத்தினம், மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.45 மணிக்கு மேள, தாளம் முழங்க உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திலிருந்து வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர். இதனை தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர்.