நாமக்கல், பிப். 5: கொல்லிமலை திண்ணனூர் நாட்டில் சாலைப்பணியின் போது பிரதான குழாய் உடைக்கப் பட்டதால், கடந்த 9 மாதமாக குடிநீர் இன்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சகதி கலந்த ஓடை நீரை பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம், திண்ணனூர்நாட்டை சேர்ந்த கிராம மக்கள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை திண்ணனூர்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தின் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பி, கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கிராமத்தில் சாலை பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரர், தொட்டிக்கு தண்ணீர் செல்லும் பிரதான குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர்.
இதனால் கடந்த 9 மாதங்களாக கிராமத்தில் சரிவர குடிநீர் கிடைப்பது இல்லை. இதுகுறித்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மலைப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள ஓடையில் வரும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஓடையில் வரும் தண்ணீரில் கழிவுகள் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சாலை பணிக்காக உடைக்கப்பட்ட குழாயை சீரமைத்து தொட்டிக்கு தண்ணீர் வீட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சப்கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் மாணவர் தர்ணா நாமக்கல்லில் சாதி சான்றிதழ் கேட்டு, சப்கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் கல்லூரி மாணவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மூலக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்வரன்(22). இந்து மலையாளி இனத்தை சேர்ந்த இவர், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக சாதி சான்றிதழ் கேட்டு, கடந்த ஆண்டு ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். ஆனால், இதுவரை அவருக்கு சாதி சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை விக்னேஷ்வரன், அவரது தாய் சித்ரா ஆகியோர், நாமக்கல் சப்கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர், இருவரும் அலுவலக வாசலில் அமர்ந்து சாதி சான்றிதழ் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தினர். சாதி சான்றிதழ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி கூறுகையில், ‘கொல்லிமலை பகுதியில், இதுவரை 4 ஆயிரம் பேருக்கு இந்து மலையாளி சாதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ்வரன் சாதி சான்றிதழ் கேட்டு அளித்த மனுவை, ராசிபுரம் தாசில்தார் பரிசீலனை செய்த போது, அவர் விண்ணப்பத்தில் அளித்த முகவரியில் குடியிருக்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருவதாக விஏஓ அளித்த சான்றின் அடிப்படையில், விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது முறைப்படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தால், சாதி சான்றிதழ் வழங்கப்படும்,’ என்றார்.ராசிபுரத்தில்