கெங்கவல்லி, பிப்.2: தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளியங்குறிச்சி ஊராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சீர்செய்யக்கோரி நேற்று காலை அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வீரகனூர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வைரவன் குட்டை பகுதிகளில் ஆழ்கிணறு அமைக்கப்பட்டு மின் மேட்டார் மூலம் ஊராட்சி சார்பில் தண்ணீர் எடுத்து விடப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த மின் மேட்டார் பழுதாகியுள்ள நிலையில், சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி செயலாளர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டத்தில் குதித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.