சிவகங்கை, பிப்.2: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு விழாக்களில் அதிக சத்தத்துடனான வெடிகளை வெடித்து வாணவேடிக்கைகள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் கோவில் விழாக்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிகழ்ச்சிகளில் வேட்டு எனப்படும் ஒரு வகை வெடிகள் வெடிப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் முக்கியமான நேரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே இவ்வாறு செய்யப்பட்டது. வேட்டு வகையிலான வெடிகள் அதிகமான உயரம் சென்று குறைவான சத்தத்துடன் வெடிக்க கூடியது. அதிக உயரம் சென்று வெடிப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் சத்தம் எளிதில் சென்றடையும். ஆனால் இந்த நிலை மாறி தற்போது திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களில் அதிகபட்சமாக பல லட்ச ரூபாய் செலவு செய்து வாண வேடிக்கை நிகழ்ச்சி என நடத்துகின்றனர். சாலையின் குறுக்கே கயிறு கட்டி அதில் தொங்கவிடப்படும் வெடிகள் சிறிது நேரம் வண்ண ஒளியை உமிழ்ந்து பின்னர் வெடிக்கிறது. இந்த வெடிகள் அதிக சத்தத்துடனான ஒலியை எழுப்புகிறது.