புதுவை ரயில் நிலையத்தில் ஆட்டோவில் செல்போன், பணம் திருடிய மதுரை ஆசாமி சிக்கினார்

புதுச்சேரி, ஜன. 31: புதுவை, ரயில் நிலையத்தில் ஆட்டோவில் இருந்த செல்போன், பணத்தை திருடிய மதுரை ஆசாமி கையும்களவுமாக பிடிபட்டார்.  புதுவை, கோலாஸ் நகர், பிரான்சுவா தோட்டத்தில் வசிப்பவர் சத்தியமூர்த்தி  (42). ஆட்டோ டிரைவரான இவர் ரயில் நிலையம் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில்  வண்டி ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று தனது ஆட்டோவை அங்கு நிறுத்தி விட்டு சக ஆட்டோ டிரைவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்டோவில் இருந்த செல்போன் மற்றும் ரூ.420 ரொக்கத்தை திடீரென ஒரு  மர்ம ஆசாமி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப் பார்த்தவர்கள்  கூச்சல் போடவே, அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை துரத்திச் சென்று  மடக்கி பிடித்தனர்.

 பின்னர் அவர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலான போலீசார்  வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரை, வடக்கு  தாலுகா, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (40) என்பதும்,  திருமணமாகாத இவர்  புதுவைக்கு ஆன்மிக சுற்றுலா வந்ததாகவும், கையில்இருந்த  பணம் முழுவதும் செலவாகி விட்டதால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும்  தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: