மிளகாய் பொடி தூவி தாக்குதல் இளம்பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு

மணப்பாறை, ஜன.23:  புத்தாநத்தம் அருகே டூவீலரில் வந்த இளம்பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி, அவரை தாக்கி 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள புங்குருணிப்பட்டியை சேர்ந்தவர் நேருசாமி. இவரது மனைவி பிரியா(27). இவர் நேற்று ஊனையூர் சென்றுவிட்டு மருங்காபுரி வனப்பகுதி வழியாக டூவீலரில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். முடுக்குப்பட்டி அருகே வரும்போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் பிரியாவின் மீது மிளகாய் பொடியை தூவினர். அது பிரியாவின் மீது படாமல் கீழே விழுந்தது. இதனையடுத்து, பிரியா வந்த டூவீலரை எட்டி உதைத்து கீழே தள்ளிய மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை பிடித்து இழுத்தபோது, பிரியா அதனை கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடினார்.

இதனால், அரை பவுன் தாலிக்கொடி மட்டும் மர்ம நபர்கள் கைகளில் சிக்கியது. இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பிரியாவை தாக்கி  அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் மதிப்புள்ள மற்றொரு செயினையும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதில் கீழே தள்ளியதில் லேசான காயமடைந்த பிரியா இது சம்பந்தமாக புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். இதன்  பேரில் வழக்குப்பதிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இளம்பெண் மீது மிளகாய் பொடியை தூவி, தாக்குதல் நடத்தி நகைகளை பறித்து சென்ற சம்பவம் பகுதி பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது.

Related Stories: