திருச்சி, ஜன.23: பஸ்சில் கண்டக்டரிடம் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியவரை விரட்டி பிடித்த பயணிகள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சேலத்திலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் நேற்று காலை வந்தது. நாமக்கல்லை சேர்ந்த கண்டக்டர் சசிகுமார் பயணிகளிடம் டிக்கெட் வழங்கி வந்தார். கையில் ரூ.10 ஆயிரம் பணத்துடன் பை வைத்திருந்தார். பஸ் பழைய பால் பண்ணை பஸ் நிறுத்தம் அருகே நின்றபோது, ஒருவன் கண்டக்டர் பணப்பையை பறித்துக் கொண்டு ஓடினான். இதை பார்த்த பயணிகள் அவனை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், பணப்பையை பறித்தவர் மண்ணச்சநல்லூர் துடையூரை சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்ளது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.