ஊத்தங்கரை, ஜன.22: ‘ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாததால், நேற்று 5வது நாளாக பிரமாண்ட பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் ராட்சத இயந்திரத்தை எதிர்பார்த்து சிலை ஏற்பாட்டாளர்கள் காத்திருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சத டிரெய்லர் லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 7ம் தேதி பெங்களூரு நோக்கி புறப்பட்டனர். வந்தவாசி, திருவண்ணாமலை சாலையில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை சிலை வந்தடைந்தது.