சிவகாசி, ஜன. 22: வெம்பக்கோட்டையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி-சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் வெம்பக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த ஊர் வழியாக சங்கரன் கோவில், ஆலங்குளம், சாத்தூர், கோவில்பட்டி, திருவேங்கடம், ஏழாயிரம்பண்ணை போன்ற பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்க பட்டு வருகின்றன. இதனால் வெம்பக்கோட்டையில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில், வெம்பக்கோட்டை பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம், தோண்டிய மணலை மலை போல குவித்து வைத்துள்ளனர். இந்த குவியலை மாதக் கணக்கில் அகற்றாமல் உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் குவியல் சரியாக தெரிவதில்லை.