டிஜிபியுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை

புதுச்சேரி,  ஜன. 22: புதுவையில் அவ்வப்போது கொலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபகாலமாக  குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை பணிகளில் மக்களுக்கு  அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி  நேற்று சட்டசபை அலுவலகத்தில் டிஜிபி சுந்தரி நந்தாவுடன் முக்கிய ஆலோசனை  நடத்தினார். அப்போது மாநில சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அவரிடம்  கேட்டறிந்த முதல்வர், காவல்துறை கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த  உத்தரவிட்டார். இதுதவிர ராஜ்நிவாஸில் கவர்னர் கிரண்பேடி காவல்துறை  அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தியதற்கான காரணம் குறித்தும் டிஜிபியிடம்  முதல்வர் விவாதித்ததாக கூறப்படுகிறது.பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒரே  இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளளை இடமாற்றம் செய்ய இந்திய  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த நடைமுறையின்படி புதுவை  காவல்துறையில் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இடமாற்றம் செய்வதற்கான  நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.மேலும்  காவலர்களுக்கான 13வது ஊதியம் மற்றும் சலுகைகள், பதவி உயர்வு உள்ளிட்டவை  பற்றியும் டிஜிபியுடன் முதல்வர் விவாதித்ததாக கூறப்படுகின்றன.

Related Stories: