கடையம், ஜன. 18: கடையம் அருகே செட்டிமடம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கடையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் செட்டிமடம் பகுதியில் பல ஆண்டுகளாக ஊராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதில் பிளாஸ்டிக் குப்பைகளும் சேர்த்து எரிக்கப்படுவதால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக தீவைத்து எரிக்கப்படும்போது வெளிவரும் புகை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி குடியிருப்பு பகுதிகளில் காற்றில் பரவுகிறது. இதனால் எழில்நகர், வாசுகிரிநகர், நரையப்பபுரம், அங்கப்பபுரம் ஆகிய கிராம மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதோடு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.