திருப்பூர், ஜன.18: சேதமடைந்து கிடக்கும் ஈஸ்வரன் கோயில் தரைப்பாலத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாநகரின் மையபகுதியான ஈஸ்வரன் கோயில் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். பள்ளி,கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் பலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் இந்த வழியாக பயணிக்கின்றனர். இந்த பாலம் மிகவும் இடிந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், பாலத்தின் தடுப்பு சுவரும் சேதம் அடைந்துள்ளது. சேதத்தை சீரமைக்காமலும், பாலத்தின் ஓரங்களில் சுவர் எழுப்பாமலும், சிமெண்ட் டிவைடர்களை வைத்து தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் செல்ல கூடிய வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். மேலும், இந்த தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.மீண்டும் ஒரு வெள்ளம் வந்தால் பாலம் முழுவதும் நீரில் அடித்து செல்ல அதிக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைவதன் மூலம் திருப்பூர் மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.