புதுச்சேரி, ஜன. 11: புதுவை, திப்புராயப்பேட்டை, லசார் கோயில் வீதியில் மத்திய அரசு நிறுவனமான மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதார சேவை மையம் உள்ளது. இதன் துணை இயக்குனராக டாக்டர் குஸ்வா பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்தில் டிரஸ் மேக்கிங் இன்செக்டராக அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி (30) என்பவர் பணியாற்றி வருகிறார். வேலை விவகாரம் தொடர்பாக செந்தமிழ்செல்வியை, அதிகாரி கண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செந்தமிழ்செல்வியின் கணவர் அருள்தாஸ் (34) சம்பவத்தன்று தனது மனைவி பணிபுரியும் அலுவலகத்துக்கு சென்று அவருக்கு ஆதரவாக பேசி டாக்டர் குஸ்வாவை அசிங்கமாக திட்டி மிரட்டினாராம். இது குறித்து டாக்டர் குஸ்வா, காவலர் புகார் விசாரணை குழுவிடம் முறையிட்டார். அவர்களது உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் கட்டிட ஒப்பந்ததாரர் அருள்தாஸ் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.