புதுச்சேரி, ஜன. 4: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பாரம்பரிய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துதல், சாலை புதுப்பித்தல், நடைபாதைகளை சீரமைத்தல், மின் விளக்கு அமைத்தல் போன்ற பணிகள் சில குறிப்பிட்ட வீதிகளில் மட்டும் 9 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 965 ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால், இப்பணிகள் ஏதோ மத்திய அரசின் நிதியை வீணாக்கும் நோக்கில் நடைபெற்று வருவது போல் தெரிகிறது. ஏனெனில், நடைபாதைகளை சீரமைக்கும் பணி மேற்கொண்டுள்ள குறிப்பிட்ட வீதிகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து இரும்பு வேலி, மதில் சுவர், வாகனங்களை ஏற்றுவதற்கு படிகள் மற்றும் வீட்டின் முகப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்ைல. இதுபோன்ற சூழலில் பல கோடி செலவில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதில் உள்ள இடையூறுகளினால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியுமா? என கருதாமலும், நகராட்சி அதிகாரிகளை கலந்தாலோசிக்காமலம் அவசர கதியில் செயல்படுத்துவதால் அரசின் நிதி வீணாகும் நிலைதான் ஏற்படும்.