புதுச்சேரி, ஜன. 4: புதுவையில் மாசிமக தீர்த்தவாரிக்காக குருசுகுப்பத்தில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அங்கு அமைக்கப்படும் பாலம் தை மாதத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.புதுவை வைத்திக்குப்பத்தில் வருடந்தோறும் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை அரசும், காவல்துறையும் மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே கடற்கரை சாலை பழைய வடிசாராய ஆலையில் இருந்து குருசுகுப்பம் ரோடு வழியாக வைத்திக்குப்பம் செல்லும் வழியில் உள்ள மிக குறுகலான பாலத்தால் தீர்த்தவாரியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் திணறி வந்தனர். இதையடுத்து அங்கு பெரிய பாலம் அமைப்பது சாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் தொகுதி எம்எல்ஏ லட்சுமிநாராயணனிடம் முறையிட்டனர்.இதையடுத்து இப்பிரச்னை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு இப்பணிகள் ரூ.1.65 கோடி செலவில் தொடங்கப்பட்டது. தற்போது பெரிய பாலம் கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் இன்னும் சில தினங்களில் அவை முழுமையாக நிறைவடைய உள்ளது.