திருச்சுழி, ஜன். 3 நரிக்குடியிலிருந்து இலுப்பைகுளம் வழியாக காரியாபட்டிக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் உவர்புளியங்குளம், சாலை இலுப்பைக்குளம், இருவர்குளம், பனைக்குடி, எஸ்.மறைக்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் வேலைக்கும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கும் காரியாபட்டிக்கு சென்று வருகின்றனர்.நரிக்குடியிலிருந்து காரியாபட்டிக்கு காலை நேரத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பஸ் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் மதியம் 12.30, 2.30, மாலை 4.15 மணி என ஒரு தனியார் பஸ் காரியாபட்டி செல்லுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு கிளம்பும் பஸ்ஸை தவறவிட்டால், அடுத்த பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் வேறு வழியின்றி லோடு வேன்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில், கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.