திண்டுக்கல், ஜன. 3: தடை உத்தரவினை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியில் ஒப்படைத்தனர்.
கடந்த ஜூன் அன்று பிளாஸ்டிக் தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி கடந்த 6 மாதமாக மாவட்டத்தில் பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.1) முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க மாநகராட்சி அறிவுறுத்தியது. இதன்படி பொதுமக்கள் மற்றும் வணிகநிறுவனங்கள் தாமாகவே முன்வந்து சுமார் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சியில் ஒப்படைத்தனர். மேலும் சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க சங்க நிர்வாகிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.