கூடுவாஞ்சேரி, டிச. 28: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் இந்திய ஓநாய் 7 குட்டிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈன்றது. மேற்பார்வை முடிந்து, தற்போது பார்வையாளர்களுக்காக விடப்பட்டுள்ளது. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொடர் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையை முன்னிட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்காக கூடுதல் வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. இவற்றில் கூடுதல் மின்கல ஊர்திகள், பாலூட்டும் அன்னையர் அறைகள், கூடுதல் வாகன நிறுத்துமிடம் குறிப்பிடத்தக்கவை. பார்வையாளர்களின் வருகையை மேலும் சிறப்பிக்க புதிதாக பிறந்த இந்திய ஓநாய்கள் மற்றும் நீல மான் அந்தந்த விலங்கு கூடத்தில் முதல் முறையாக பார்வைக்கு விடப்பட்டுள்ளது.