திருவண்ணாமலை, டிச.21: திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூக்குக் கயிற்றில் தொங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், பவர்கிரிட் நிறுவனம் இணைந்து, தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வழியாக வெளி மாநிலங்களுக்கு புதிய மின் வழித்தடங்களை ஏற்படுத்தி வருகின்றன.அதற்காக, விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில், முன்னறிவிப்பு இல்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை அடுத்த தென்னசரம்பட்டு கிராமத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பலராமன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 4வது நாளாக நீடித்தது. கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் இரவு, பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.