ஜெயங்கொண்டம், டிச.20: ஜெயங்கொண்டம் நகராட்சியில் ரூ.8 கோடி மதிப்பிலான நவீன கலவை உரக்கிடங்கு திட்டம் கிடப்பில் போட்டதால் தளவாடங்கள் எந்திரங்கள் சேதமாகி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கசள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் செங்குந்தபுரம், சின்னவளையம், வேலாயுதநகர், கரடிகுளம், கீழகுடியிருப்பு, மேல குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 21 வார்டுகள் 33, ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் நகராட்சியில் பணிசெய்யும் சுமார் 159 துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளுவதற்காக கை வண்டிகளும் வழங்கப்பட்டு வீடுகளில், வீதிகளில் குப்பைகளை அள்ளி கொம்மேடு பகுதியில் கொட்டப்பட்டன. இதற்கிடையே தற்பொழுது நகராட்சியால் கட்டப்பட்ட சமுதாயகூடம் அருகே குப்பைகளை கொட்டி தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக வேண்டுவோருக்கு வழங்கப்பட்டு வந்தன. மக்காத குப்பைகளை அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு எரிவூட்டுவதற்காக அனுப்பப்பட்டு வந்தன. இந்தக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக செங்குந்தபுரம் அருகே புதுக்குடி ஊராட்சியில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.7 கோடி 22 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சார்பில் நவீன கலவை உரக்கிடங்கு அமைப்பதற்காக துவங்கப்பட்டது.