கோவில்பட்டி, டிச.18: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி கோவில்பட்டி கடைகளில் 24 வகையான வண்ண கோலப்பொடிகளின் விற்பனை களை கட்டியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய கலாசார வழக்கங்களில் கோலமிடுதலும் ஒன்றாக திகழ்கிறது. தினமும் கோயில்கள், இல்லங்கள் மற்றும் பூஜை அறைகளில் கோலங்கள் இடுவது ஒரு அழகு கலையாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்து விட்டாலே தமிழ் பெண்கள் தங்களது இல்லங்களின் முன்பு மாக்கோலம், வண்ணமிகு கோலங்களை இட்டு அழகு பார்ப்பார்கள். இந்தாண்டு மார்கழி மாத பிறப்பு நேற்றுமுன்தினம் துவங்கியது. இதையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பகுதி, கிருஷ்ணன்கோயில் தெரு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில்ரோடு, மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு போன்ற பல்வேறு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் கோலப்பொடி கடைகள், பேன்ஸி ஸ்டோர், மங்கள பொருட்கள் கடைகளில் கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கலர் கோலப்பொடி ரூ.30க்கு விற்றது. ஆனால் மத்திய அரசின் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இந்தாண்டு ரூ.10 அதிகரித்து கிலோவிற்கு ரூ.40க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் பெண்கள் ஆர்வமுடன் கலர் கோல பொடிகளை கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.