முத்துப்பேட்டை, டிச.12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஜா புயலுக்கு பிறகு அணைத்து மின்கம்பங்களும் காற்றின் வேகத்திற்கு சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாட்கள் கடந்தும் இன்னும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கூட சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமை படாமல் உள்ளதால் மக்கள் மின்சாரமில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதில் முத்துப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தற்போது வரை மின்சாரம் இல்லை என்ற நிலையில், அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்ததுபோல் தவித்து வருகின்றனர். இந்நிலை சில தினங்களுக்கு முன் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் மின் சீரமைப்பு பனி முடிந்து இரவில் மட்டும் மின்சாரம் விநியோகம் செய்து வரப்படுகிறது. அதுவும் இரவு 8மணிக்கு பிறகு வருவதால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. அதனால் அப்போதைக்கு வழங்கும் மின்சாரத்தை மாலை 6மணி முதல் வழங்க வேண்டும் என்று வியாபாரிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை வர்த்தகக் கழக தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு சென்று கஜா புயல் பாதிப்புகள் சரி செய்வதற்காக மின்சார துறைக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ள கோவை சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.