நாகர்கோவில், டிச. 12: நாகர்கோவில் அருகே குடிநீர் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நாகர்கோவில் நகர பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன் கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. முக்கடல் அணையில் இருந்து ஈசாந்திமங்கலம், இறச்சக்குளம், புத்தேரி வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு, தண்ணீர் வருகிறது. இவ்வாறு தண்ணீர் வரும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் புத்தேரி, ஈசாந்திமங்கலம் அருகே முக்கடல் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது.