சட்டசபையில் அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்

புதுச்சேரி,  டிச. 11: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை வரும்  சட்டமன்ற கூட்டத்தில் புதுச்சேரி அரசே நிறைவேற்ற வேண்டுமென அதிமுக எம்எல்ஏ  அன்பழகன் வலியுறுத்தி உள்ளார். புதுவையில் சட்டசபை சிறப்பு கூட்டத்  தொடர் வருகிற 14ம்தேதி கூடுகிறது. இதற்கிடையே அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர்  அன்பழகன் எம்எல்ஏ சார்பில் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் ஒரு கடிதம்  கொடுக்கப்பட்டுள்ளது.

 அதில், கர்நாடகா மேகதாது இடத்தில் அணை கட்ட  மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதால் காவிரியின் கடைமடை  பகுதியான காரைக்கால் மாவட்டத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல் வறண்ட  மாவட்டமாகும் நிலை ஏற்படும்.

 புதுவை அரசின் கருத்தைக்கூட கேட்காமல்  அனுமதிவழங்கிய மத்திய அரசின் தவறை கண்டித்தும், காவிரி நடுவர் மன்ற இறுதி  ஆணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி  ஆற்றுப் படுகையில் கர்நாடகா அரசு எந்தவிதமான கட்டுமான பணியையும் செய்யக்  கூடாது என மத்திய அரசு உத்தரவிட வலியுறுத்தியும் சிறப்பு  சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை  கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.

 மிக முக்கியமான இந்த  தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற அதிமுக சார்பில் சபாநாயகரை கேட்டுக்  கொள்கிறேன். தமிழகத்தோடு இணைந்து செயல்பட வேண்டிய புதுச்சேரி அரசும்,  ஏகமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி  வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: