காரைக்குடி, டிச.11: காரைக்குடியில் சந்தை பகுதியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பொது கழிப்பிடமாக மாற்றி வருவதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருவதோடு தெற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி கணேசபுரம் ரோட்டில் வாரசந்தை கொப்புடைய நாயகி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. 6 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள சந்தையில் 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காரைக்குடி, அரியக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, சாக்கோட்டை, கல்லல், பெரியகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெரிய மற்றும் சிறிய அளவில் கடைகள் போடப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடைபெறும் சந்தையில் காரைக்குடி சுற்றுப்புற மக்கள், அமராவதிபுதூர், சாக்கோட்டை உட்பட கிராம பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகிறார்கள். தவிர மீன், கருவாடு போன்றவைகளுக்கு என தனியாக கடை உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இச்சந்தையில் சுகாதாரம் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. சந்தையின் முன்பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் கட்டி கேட் அமைத்துள்ளனர். பின்புறம் சுற்றுச்சுவர் உடைந்து உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சந்தை பகுதியை பொது கழிப்பிடமாக மாற்றி வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மது அருந்தும் இடமாகவும், சீட்டு விளையாடுவது உள்பட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறி வருகிறது.