குன்னூர்,டிச.11 : நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான நீரோடைகள் உள்ளன. குறிப்பாக தொட்டபெட்டா மலையில் இருந்து வரும் நீரோடை கேத்தி பலாடா வழியே சென்று காட்டேரி அணையை சென்றடைகிறது. பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு குழாய் மூலம் அருவங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேத்தி பாலாடா பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்ற காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் காளான் தயாரிப்பின் உரம் சேகரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் கேத்தி பாலாடா நீரோடையில் வீசப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமின்றி, விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் அதிகளவு ஓடையில் கொட்டப்படுவதால் ஓடை நீர் மாசடைகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை கொட்டாதவாறு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.