சூலூர், டிச.11: சூலூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டிடம் இன்னும் திறப்பு விழா காணமால் பாழடைந்து வருகிறது. திறப்பு விழாவுக்கு சூலூர் எம்எல்ஏ.,விடம் தேதி கேட்டால் நான் ரொம்ப பிசியாக இருக்கிறேன் என காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. சூலூர் அரசு மருத்துவமனை 36 உள்நோயாளிகள் படுக்கை வசதியுடன் தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் இடவசதி குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.