திருவண்ணாமலை, டிச.7: திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் புதைந்து கிடந்த 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தின் வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது.திருவண்ணாமலை பகுதியில், ஏராளமான வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், வீர நடுகற்கள் போன்றவை சமீபகாலமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் உள்ள நத்தம்மேடு பகுதியில், விவசாய நிலத்தில் ஒரு மரத்தின் அருகே மண்ணோடு புதைந்து கிடந்த வீரக்கல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.தொல்லியல் ஆய்வாளர் சேகர், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரா.தனிஸ்லாஸ், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் தா.ம.பிரகாஷ், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இந்த வீரக்கல்லை ஆய்வு செய்தனர்.அப்போது, விஜயநகர பேரரசு காலமான 15ம் நூற்றாண்டை சேர்ந்த குறுநில மன்னன் அல்லது போர் வீரனின் வீரக்கல் என தெரியவந்தது. அதன் வரலாற்று தொன்மை அறியாமல், மாடு கட்டும் கல்லாக பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மண்ணில் புதையுண்டு கிடந்தது தெரியவந்தது.