புதுச்சேரி, டிச. 6: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தனியார் படகு குழாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக (பிடிடிசி) ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். சுற்றுலா வளர்ச்சி கழக அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இப்போராட்டம் நடந்தது. இதில் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுற்றுலாத்துறை அமைச்சர் வீட்டை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஊழியர்கள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர். ஆனால் அமைச்சர் ஊரில் இல்லாததால் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.