ஊட்டி, நவ. 23:நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் ேநற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டியில் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவியது. இதனால், பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ முதல் எல்லநள்ளி வரையிலும், அதேபோல், லவ்டேல் சந்திப்பு முதல் நுந்தளா மட்டம் வரையிலும் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.