புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரியில் தொழிற்சாலை விபத்தில் 32 வயது இளைஞர் இரு கைகளையும் இழந்து ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பீகாரை சேர்ந்த 22 வயது இளைஞர் பெங்களூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது தந்தை காவலாளியாகவும், தாய் கூலித்தொழிலாளியாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இத்தகவல்கள் உறுப்பு தானம் தேவைப்படுவோர் பட்டியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஜிப்மரில் கைகள் தேவைப்படும் விவரம் தெரிய வந்தது. அவர்கள் பீகார் இளைஞரின் கைகளை பெங்களூரிலிருந்து புதுச்சேரி கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 18ம் தேதியன்று பீகார் வாலிபரின் கைகள் பிரித்து எடுக்கப்பட்டது. அந்த கைகளுக்கு பதிலாக செயற்கை கைகளை தானம் செய்தோருக்கு அமைத்தனர். பின்னர் இளைஞரின் இரு கைகளும் பாதுகாப்புடன் 18ம் தேதி காலை 11.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சாலை வழியாக ஆம்புலன்ஸில் புதுச்சேரிக்கு புறப்பட்டது.