புதுச்சேரி, நவ. 16: கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த உமாசங்கர் மனைவி மகேஸ்வரி (31). இவர், ஜிப்மரில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கணவரை இழந்த மகேஸ்வரி, மகன் அரவிந்தனுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன், மகேஸ்வரியின் கூரை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மகேஸ்வரி, மகன் அரவிந்தனுடன் அதே பகுதியில் உள்ள தாய் முத்துலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி முத்துலட்சுமியின் குடிசை வீடும் மர்மமாக தீப்பிடித்து எரிந்தது. முன்விரோதம் காரணமாக சண்முகாபுரத்தை சேர்ந்த நடராஜன் (48) என்பவர் வீட்டுக்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரிடம் போனில் மகேஸ்வரி விசாரித்துள்ளார். இதனால் மகேஸ்வரி மீது நடராஜனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மகேஸ்வரி வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மணப்பட்டு ரோட்டில் வந்தபோது அவரை நடராஜன் வழிமறித்து தரக்குறைவாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து நடராஜனை கைது செய்தனர்.