ஊட்டி, நவ. 16: நீலகிரியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதாலும், இரவில் கடும் பனிப் பொழிவு காணப்படுதாலும் விவசாயிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை இன்னும் துவங்கவில்லை. மாறாக, தற்போது மழையின்றி வெயில் வாட்டியெடுக்கிறது. எப்போதும் குளிராக காணப்படும் ஊட்டியிலும் கூட பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் நீர் பனிக் கொட்டுகிறது.