புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரியில் பேயிடம் மாட்டிக் கொண்டு முதல்வர் முழிக்கிறார், மே மாதத்திற்கு பிறகு வசந்தகாலம் பிறக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி பேசினார். புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில் அரியாங்குப்பத்தில் நேற்று நடந்த குழந்தைகள் தின விழாவில் தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தி வாழ்த்தி பேசியதாவது: புதுச்சேரியில் கல்வியை மேம்படுத்த இன்னும் தனி கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஸ்மார்ட் பள்ளியை உருவாக்க வேண்டும். கல்வி புரட்சி வர வேண்டும். ஆசிரியர்கள் கூட, தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை. அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் நிலையை உருவாக்க வேண்டும்.