பேயிடம் மாட்டிக் கொண்டு முதல்வர் முழிக்கிறார்

புதுச்சேரி, நவ. 15:  புதுச்சேரியில் பேயிடம் மாட்டிக் கொண்டு முதல்வர் முழிக்கிறார், மே மாதத்திற்கு பிறகு வசந்தகாலம் பிறக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி பேசினார். புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை சார்பில் அரியாங்குப்பத்தில் நேற்று நடந்த குழந்தைகள் தின விழாவில் தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தி வாழ்த்தி பேசியதாவது: புதுச்சேரியில் கல்வியை மேம்படுத்த இன்னும் தனி கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஸ்மார்ட் பள்ளியை உருவாக்க வேண்டும். கல்வி புரட்சி வர வேண்டும். ஆசிரியர்கள் கூட, தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை. அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் நிலையை உருவாக்க வேண்டும்.

மக்களுக்காக ஓயாமல் உழைத்து வருபவர் நம் முதல்வர். காலையில் காரைக்காலில் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன்பிறகு புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுபோல் கடுமையாக உழைக்கும் முதல்வரை யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் வந்த நேரம் தான் சரியில்லை என நான் நினைக்கிறேன். ஏனென்றால் இங்கு ஒரு பேய் இருக்கிறது. அதுகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறார். அதுபோல் மேலே இருக்கிற பாஜக அரசு எங்களை ெராம்பவும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கெல்லாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பதில் கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு வசந்த காலம் புதுச்சேரிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: