புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி, தமிழகத்துக்கு கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தடைந்தது. 25 பேர் கொண்ட ஒரு குழு புதுச்சேரியிலும், மற்றொரு குழு காரைக்காலிலும் முகாமிட்டுள்ளது. அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பேரிடர் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று, லாஸ்பேட்டை இசிஆரில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளுக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கமாண்டர் அமர் தலைமையில் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், ஜெயராம் நகர், ரெயின்போ நகர், ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் தலைமையில் அவர்கள் ஆய்வு செய்தனர்.