பண்ருட்டி, நவ. 15: பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் கஜா புயலை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சாலைகளில் மரங்கள் விழும்போது, அவற்றை வெட்டி அகற்ற நவீன இயந்திரங்கள், தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்களை காப்பாற்ற ரப்பர் டியூப்கள், கயிறுகள், லைப் ஜாக்கெட்டுகள், கடப்பாரை, கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் பண்ருட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டியில் சிறுசிறு குறைகள் கண்டறியப்பட்டு தயார்நிலையில் வைத்துள்ளனர். நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் தயாராக உள்ளனர்.