கம்பம், நவ.14: கம்பம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான காய்ச்சல் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ஆய்வு செய்தார். கம்பம் அரசு மருத்துவமனைக்கு கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, கூடலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தில் உள்ள நெடுங்கண்டம், கட்டப்பனை, வண்டன்மேடு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண்சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை உள்பட 35க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனிபிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் கட்டில்களில் கொசு வலை அமைக்கப்பட்டு நோயாளிகள் தனி கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.