திருச்சி, நவ.1: மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர்கள் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி நேற்று ரயில் உபயோகிப்பாளர்கள் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர்கள் ஹரிஷ், ஆய்வு ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் பயணிகள் கூட்டமைப்பினர், எம்பிக்கள் நியமன உறுப்பினர்கள், நுகர்வோர் கூட்டமைப்பு, வணிக அமைப்புகள், மாற்றுதிறனாளிகள் சங்கபிரதிநிதி, மத்திய மாநில அரசுகளால் நியமனம் செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.