காரைக்கால்,அக்.26: காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் ரூ.13.50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணியை, தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் துவங்கி வைத்தார். திருமலைராயன்பட்டினம் தொகுதியை சேர்ந்த விஎஸ் நகரின் உள்புறச் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், மழைக்காலத்தில் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. எனவே, இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், எம்எல்ஏ கீதா ஆனந்தன், புதுச்சேரி அரசிடம் பேசி, ஊரக பகுதிகளில் அடிப்படை குடிமை வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் இதர மேம்பாட்டு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கான எஸ்.சி.எஸ்.பி. திட்ட நிதி ரூ.13.50 லட்சத்தில், சாலைகளை மேம்படுத்த புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்தது.