திருவண்ணாமலை, அக்.23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு மாதத்தில் 2 முறை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு அரிசிமாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.